Friday 11 February 2011

ஸ்பெக்ட்ரம் நடந்தது என்ன?!!


செய்தி:தினமலர் 
Source:Dinamalar
தினமலர் நாளிதழில் வெளி வந்த ஒரு செய்தி உங்கள் பார்வைக்கு...
                       ஸ்பெக்ட்ரம் நடந்தது என்ன?!!
ஸ்பெக்ட்ரம் நடந்தது என்ன?!!! ஒரு சராசரி குடிமகன் பார்வையில் நண்பர்களே!!! தேசிய அவமானமான ஸ்பெக்ட்ரம் பற்றி நாம் அறிவோம், அதில் ஒண்ணேமுக்கால் லட்சம் கோடி ரூபாய் அளவுக்கெல்லாம் ஊழல் செய்யப்படவேயில்லை என்றெல்லாம் மக்களே பேச ஆரம்பித்து விட்டனர். ராஜா கைது தான் செய்யப்பட்டாரே தவிர குற்றம் நிரூபிக்கப்படவில்லை, அதுவரை நாங்கள் அவரை அரவணைத்துக் காப்போம் என்கிறார் முதல்வர். இது தினம் ஒரு அறிக்கை வரும் தேர்தல் நேரம்,மக்கள் சிந்திக்க வேண்டிய காலம், அப்படி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மெய்யாகவே நடந்தது என்ன ?!!! என்பதை துபாயில் பணிபுரியும் சிவக்குமார் என்னும் பொறியாளர் அருமையாக ஆய்வு செய்து எழுதியுள்ளார், இது இப்போது இமெயிலில் வரத்துவங்கிவிட்டது, இனியேனும் நன்கு படித்தவர்கள் அவசியம் சிரமம் பாராமல் சிந்தித்து வாக்களித்து நாட்டைக்காக்கவேண்டும். அவசியம் இதைப்படித்துவிட்டு ஃபேஸ்புக், ஆர்குட், ட்விட்டர் தளங்களில் ஃபார்வர்டும் செய்யவும். மக்கள் அனைவரையும் இலவசங்களை மட்டுமே வாங்க தெரிந்த மாக்கான்கள் என்றே நினைத்து விட்டார் நம் முதல்வர். அதற்காகத்தான் தமிழ்நாட்டில் அனைவரும் குழந்தை பெற்றுகொள்கிறார்கள் என்று சொன்னாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை. என்னது ஏழைகள் பயன்படுத்தும் அளவிற்கு குறைந்த விலையில் சேவையை கொண்டுவந்தது ராசாவா? மக்களே உண்மையை புரிந்து கொள்ளுங்கள். இந்த புளுகு மூட்டைகளின் பாவத்திற்கு ஆளாகாதீர்கள். விலை குறைந்ததிற்கான காரணத்தை இங்கு குறிப்பிடுகிறேன். 1999 ஆண்டில் தான் தொலைதொடர்பு உரிமங்கள் வழங்க ஆரம்பிக்கபட்டது. அன்று வெறும் பணம் படைத்தவர்கள் மட்டுமே கைபேசியை பயன்படுத்தினர். எனவே நுகர்வோரின் எண்ணிக்கை மிக குறைவு. சில பல லட்சங்கள் மட்டுமே. தொழில் நுட்பவளமான 1G அல்லது 2G அலைக்கற்றைகள் மிக அதிக அளவில் அரசிடம் கையிருப்பு இருந்துள்ளது. ஆனால் உரிமம் வாங்க உலக அளவிலோ இந்திய அளவிலோ போட்டிகள் இல்லை. விலை கொடுத்து உரிமம் வாங்கியவர்கள் லாபம் பெற நுகர்வோரிடம் நிமிடத்திற்கு அதிக கட்டணம்(In coming and out going ) வசூல் செய்ய கட்டாயம் ஏற்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் நாம் தான் வசதி படைத்தவர்களாயிற்றே என்று இஷ்டத்திற்கு பேசி நேரத்தையோ பணத்தையோ அன்றைய வசதி படைத்தவர்கள் விரயம் செய்யவில்லை. குறைவான நேரத்துக்குதான் கைபேசியை பயன்படுத்தினர். நுகர்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்தான் அன்று அலைகற்றை உரிமம் பெற அதிக நிறுவனங்கள் முன்வரவில்லை. இதை சரி செய்ய அன்றைய அரசு ஒரு தொலை தொடர்பு புரட்சியை உருவாக்க முயன்றது. விளைவு நாளுக்கு நாள் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகமானது. இன்றும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. 2010 நுகர்வோரின் எண்ணிக்கை சுமார் 60 கோடிக்கும் மேல். 2008 இல் 50 கோடிக்கும் மேல். இதற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு போதிய அலைகற்றைகள் அரசிடம் இன்றும் உள்ளனர். ஆனால் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெறும் 60 கோடிதான். 122 தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க பட்டுள்ளது. தகுதி என்றால் என்ன? போதிய அனுபவம், வங்கி காசோலை, வங்கி செக்யூரிட்டி டெபொசிட் அது மட்டும் இல்லை வாங்கியவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் சேவையை தொடங்க வேண்டும். இந்த குறிப்பை நினைவில் வைத்து கொள்ளுங்கள். பின்னால் உதவும். டாட்டா, ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் உரிமம் வாங்கியுள்ளனர். இதோடு அந்த 122 தகுதி இல்லாத நிறுவனங்களையும் சேர்த்து கொள்ளுங்கள். நியாயக் கணக்கு: இந்தியாவில் 60 கோடி மக்கள் கைபேசி சேவையை பயன்படுத்துவதாக உண்மை தகவல் உள்ளது. எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். ஒரு நபர் தனது கைபேசியை ஒரு நாளைக்கு சராசரியாக வெறும் 15 நிமிடங்கள் (LOCAL CALLS ONLY) பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம். ஒரு நிமிடத்திற்கு 40 பைசா கட்டணம். அப்போது 15x0.40 =6.0 ரூபாய் ஒரு கைபேசியின் மூலம் செலவாகிறது. 60 கோடி கைபேசிகள். 60x6.0 = 360 கோடிகள் ஒரு நாளைக்கு செலவாகிறது. ஒரு மாதத்திற்கு 30x360 = 10,800 கோடிகள். ஒரு வருடத்திற்கு 12x10,800 = 1,29,600 கோடிகள். 2008 இல் 2G ஏலம் விடப்பட்டது. இன்று வரை இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்போ து குறைந்தபட்ச வருமானம் இன்றுவரை 2,59,200 கோடிகள். இது ஒரு நாளைக்கு வெறும் 15 நிமிடங்கள் கைபேசியை பயன்படுத்தினால் இரண்டு வருடத்திற்கு கிடைத்திருக்கும் வருமானம். இதோடு SMS, MMS, STD, ISD, சேவை கட்டணம், இணைப்பு கட்டணம்.......இன்னும் என்ன என்னவோ கட்டணங்கள் உள்ளது என்று சொல்கிறார்கள் மற்றும் 15 நிமிடத்திற்கு அதிகமாக பயன்படுத்துவோரின் செலவையும் சேர்த்தால் எத்தனை கோடி கோடிகள் வருமானமாக கிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். என்னால் கணக்கிடவே முடியவில்லை. என்னிடம் உள்ள கால்குலேட்டர் மற்றும் கணினி காண்பிப்பது "INFINITIVE". நான் தற்போது இந்தியாவில் இல்லை. இருந்திருந்தால் அனைத்தையும் அலசி ஆராய்ந்து இதைவிட இன்னும் துல்லியமாக நடந்த ஊழலின் அளவை குறிப்பிட்டு இருப்பேன். இந்த வருமானம் அனைத்தும் அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும். அது மக்களை சென்று அடைந்து இருக்கவேண்டும். கிடைத்ததா? மக்களை சென்றடைந்ததா? நிச்சயம் இல்லை என்றுதான் ஒவ்வொரு மக்களும் கூறவேண்டும். அப்படி என்றால் இந்த மக்கள் பணம் சட்டத்திற்கு புறம்பாக யாரிடமோ சென்று அடைந்துள்ளது. இந்த ஊழல் பணம் அடுத்த சில ஆண்டுகளில் தனது சொந்தநாட்டு மக்களையே தாக்கப்போகிறது. விலைவாசி உயரும். பொருளாதாரம் நாசாகும். "Above middle Class" மக்கள் நடுத்தர மக்களாகவும், நடுத்தர மக்கள் ஏழைகளாகவும், ஏழை மக்கள் மேலும் பரம ஏழைகளாகவும் மாறுவார்கள். ஜனநாயகம் வேரோடு அழியும். மனிதாபிமானம், மனிதநேயம் மண்ணோடு மண்ணாகும். ரௌடிசம்,குற்றசம்பவங்கள் தலைவிரித்து ஆடும். கடந்த ஐந்தாண்டுகளாக ஆயுள் கைதியாக உள்ள நடுநிலை பத்திரிகைகள் இனி மரண தண்டனை கைதிகளாக மாற்றப்பட்டு தூக்கில் போடப்படும். துரோகம்-1: உரிமம் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் சுமார் 13000 கோடிக்கும் அதிகம் பொறுமானம் உள்ள(உதாரணம் S .TEL நிறுவனம்13000 கோடிக்கு வாங்க முன்வந்தது) அலைகற்றைகள் உரிமத்தை அடிமாட்டு விலைக்கு அதாவது 1200 , 1300 ,1650 கோடிகளுக்கு திட்டமிட்டு விற்கப்பட்டுள்ளது. அரசுக்கு சேரவேண்டிய, மக்களுக்கு சேர வேண்டிய வருவாய் சில சுய நலவாதிகளை சென்றடைந்துள்ளது. துரோகம்-2: பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் உரிமத்தின் பங்குகளை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளனர். இதனால் அரசுக்கு அதாவது பல கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் வருவாய் சில சுய நல தனி மனிதர்களை சென்று அடைந்துள்ளது. துரோகம்-3: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய 122 நிறுவங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இதில் "swan, Unitech" போன்ற லெட்டர் பேட் நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனகள் ஏன் இன்னும் சேவையை தொடங்கவில்லை என்று உள்ளூர ஆராய்ந்தால் மிக தெளிவாக புரியும். பெரிய நிறுவனங்கள் போட்டி இல்லாமல் தொலைதொடர்பு துறையில் கொள்ளை லாபம் பார்க்க அதாவது கட்டணம் என்ற பெயரில் மக்களின் உழைப்பை சுரண்ட பெரும்பாலான தகுதி இல்லாத பினாமி லெட்டர் பேட் நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இவைகள் சேவையை தொடங்கி இருந்தால் சந்தையில் போட்டி அதிகமாகி கைபேசியில் பேசும் கட்டணம் இப்போது இருப்பதை விட மேலும் குறைந்திருக்கும். ஒரு வேளை இதற்காகத்தான் திட்டமிட்டு "S.TEL போன்ற போட்டி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கவில்லை என்ற சந்தேகம் தெளிவாக எழுகிறது. துரோகம்-4: MTNL BSNL போன்ற அரசு நிறுவனங்களுக்கு அதிக அளவில் அலைகற்றைகளை ஒதுக்கி போதிய ஆப்பெரடர்களை நியமித்து இருந்தால் கைபேசியில் பேசும் கட்டணம் நிமிடத்திற்கு வெறும் ஒரு பைசாவுக்கு வந்திருக்கும். மக்கள் அரசினால் பயன் அடைந்து இருப்பார்கள். துரோகம்-5: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய லெட்டர் பேட் நிறுவனங்கள் தனது பங்குகளை பல வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர். அதில் பாகிஸ்தான் போன்ற நாடுகளும் அடங்கும். இந்தியாவின் தொலை தொடர்பு துறையை இந்த நாடுகளும் பயன்படுத்துகின்றனர். இது உள்நட்டு மக்களின் பாதுகாப்புக்கு மிக பெரிய அச்சுறுத்தல். துரோகம்-6: நீரா ராடியா தொலைபேசி உரையாடல்கள், CAG ,தொலைதொடர்பு சம்பந்தபட்ட, கைபற்றபட்ட ஆவணங்கள், சம்பந்தபட்ட பிரதமர் அலுவலக கடிதங்கள் புறகணிப்பு, சட்ட,நிதி துறை கடிதங்கள் புறகணிப்பு, TRAI பரிதுரைகள் புறகணிப்பு இப்படி கோடி கணக்கில் ஆதாரங்கள், சாட்சிகள். முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று முந்தைய ஆட்சியாளர்கள் வகுத்த அடிப்படை கொள்கை கூட பின்பற்றப்படவில்லை. அதிலும் முறைகேடு. துரோகம்-7: இவ்வளவு குற்றங்கள் செய்தும் சம்பந்தபட்ட குற்றவாளிகள் செய்த தவறை ஒப்பு கொள்ளாமல் நாங்கள் தவறு செய்யவில்லை என்று மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்வது மக்களுக்கு இழைக்கப்பட்ட ஏழாவது துரோகம். இதன் உச்சகட்டம்தான் 2G யில் ஊழலும் இல்லை நஷ்டமும் இல்லை என்று மத்திய அமைச்சரின் பத்திரிகை பேட்டி. இந்த உலகத்திலே தான் மட்டும்தான் புத்திசாலி வக்கீல் மற்ற அனைவரும் அடி முட்டாள்கள் என்ற ஆணவ நினைப்பு. துரோகம்-8: நடந்த அனைத்து தேச துரோகங்களும், குற்றங்களும் பொருளாதார மேதை பிரதமருக்கு தெரிந்தே கண்முன்னே நடந்துள்ளது. இருந்தும் பிரதமர் வாய் மூடி மௌனியாக இருப்பது மக்களுக்கு இழைக்கபடும் மகா மகா துரோகம். துரோகம்-9: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முறைகேடாக பெறபட்ட பணங்கள் பெரும்பாலானவை இந்தியாவில் புழக்கத்தில் இல்லாமல் அந்நிய நாடுகளில்,வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல். இந்த பணம் அரசுக்கு வருவாயாக கிடைத்து இருந்தால் ஏராளமான அரசு கல்லூரிகள், பள்ளிகள், பாலங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் என்று உருவாக்கி அனைவருக்கும் கல்வி,வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் என்று ஏற்படுத்தி ஏழைகளே இல்லாத நாட்டை உருவாக்கி இருக்கலாம். இலவசங்கள் பெறாத மக்களை கண்டிருக்கலாம். துரோகம்-10: ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை பயன்படுத்தி தலித் பற்றும் பிற இனத்தை சேர்ந்த ஏழை விவசாய மக்களிடம் மிரட்டி விளை நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டதாக தகவல். இது மக்களுக்கு இழைக்கபட்ட துரோகம் பத்து. ஒரு முறைகேட்டை செய்து அதையே மூலதனமாக வைத்து இன்னொரு முறைகேடு செய்யப்பட்டுள்ளது. ஊழல் செய்வதினால் மக்களுக்கு இழைக்கபடும் துன்பங்களுக்கு இதை விட சிறந்த உதாரணம் வேறென்ன வேண்டும். நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. இதுதான் ஊழலின் விளைவுகள். இவர்கள் ரத்தம் குடிக்கும் கொசுக்கள் மாதிரி. நம்மிடம் உள்ள ரத்தத்தை உறிஞ்சுவதோடு மட்டும் இல்லை அதோடு சேர்த்து நோய் கிருமிகளையும் நமது ரத்தத்தில் விட்டு செல்கின்றனர். இப்படி 2G ஊழலில் மக்களுக்கு இழைக்கபட்ட துரோகங்கள் எண்ணில் அடங்காதது. இந்த ஊழலின் தாக்கம் இதோடு நிற்காது. மக்களைத்தான் சுத்தி சுத்தி அடிக்கும். எப்படி? ஊழல் பணத்தை வைத்து ஏழைகளின் நிலங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு அதை பிளாட் போட்டு அதே மக்களிடம் அதிக விலை வைத்து விற்கப்படுகிறது. ஒரு ஏக்கரை குறைந்த விலைக்கு விற்ற மக்கள் அந்த பணத்தை வைத்து அதே இடத்தில் அதாவது முந்தைய சொந்த இடத்தில ஒரு கிரௌண்ட் நிலம் கூட வாங்க முடியவில்லை. இதுதான் ஊழலின் விளைவு. இப்போது புரிந்து இருக்கும் ஏழைகள் எப்படி உருவாகிறார்கள் என்று. இது மட்டும் இல்லை ஊழல் பணத்தை வைத்து அனைத்து இடங்களையும் வளைத்து போட்டு ரியல் எஸ்டேட் நடத்தும் அனைத்து அரசியல்வாதிகளும் இப்படி ஊழல் பணத்தில்தான் செய்கின்றனர். அவர்கள் சொல்வதுதான் விலை. விலைவாசி உயர்வது இயற்கை அல்ல. அனைத்தும் மிக மிக செயற்கையே. இயற்கை என்று ஆளும் கட்சியினர் கூறுவது தவறு. உண்மையை மூடி மறைக்கும் செயல். இது ரியல் எஸ்டேட் மட்டும் இல்லை. அனைத்து பொருள்களுக்கும் பொருந்தும். குறைந்த விகிதத்தில் உள்ள பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள். அதிக விகித்தில் உள்ள நடுத்தர மக்கள், ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆவார்கள். இந்த ஏழை, பணக்காரன் இடை வெளியை குறைக்கத்தான் அரசாங்கம் ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். இன்று ஆளும் வர்க்கத்தினரே அதற்கு முழு முதல் காரணமாக திகழ்கிறார்கள். சொல்லபோனால் அரசின் கடமைகளை அரசியல்வாதிகளும் மறந்துவிட்டனர். இவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களும் தங்கள் கடமைகளை மறந்து இலவசத்துக்கு பின் செல்கின்றனர். இலவசம் வாங்கும் மக்களே ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் உழைப்பு என்னும் மூலதனத்தை மறந்து இலவசம் வாங்குவதால் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் நீங்கள் ஏழைகளாகத்தான் இருக்க முடியும். உங்கள் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இலவசம் கொடுக்க தேவையான வரிபணத்தை செலுத்தும் உழைக்கும் மக்களின் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இது நிச்சயம். மாற்றம் ஒன்றே மாறாதது. இலவசம் மாறவில்லை என்றால் உங்கள் வாழ்கை தரமும் மாறபோவதில்லை. எனது நோக்கமே இந்த 2G உலக மகா ஊழலால் மக்கள் எவ்வாறு வஞ்சிக்கபட்டார்கள் என்பதை ஒவ்வொரு இந்திய குடிமகனும் பத்திரிகை நிறுவனங்களில் பணிபுரியும் நண்பர்கள் உள்பட அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதுதான். எனவே தெரிந்துகொள்ளுங்கள், புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு ஏழை மக்களுக்கும் தெரியபடுத்துங்கள். ரோட்டில் இறங்கிதான் போராடவேண்டும் என்று இல்லை.கொடி பிடிக்க அவசியமும் இல்லை. e -mail, FAX , Facebook , orkut என்று எவ்வளவோ தொழில் நுட்ப வசதி உள்ளது. தங்களுக்கு உகந்த ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து தங்களின் அன்றாட வேலைகள் பாதிக்காத வகையில் சுலபமாக இதை செய்யமுடியும். செய்வீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி. 
 தினமலர் நாளிதழில் வெளி வந்த ஒரு செய்தி உங்கள் பார்வைக்கு...
நன்றி:தினமலர் 
செய்தி:தினமலர் 
Source:Dinamalar

இன்றும் என்றும் ஜீவிக்கிறார்


அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2010 நவம்பர் மாதம் 12-ம் தேதி - வெள்ளி கிழமை
இன்றும் என்றும் ஜீவிக்கிறார்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார்; அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம். - (மாற்கு 16:6).

மூன்று மனிதர்கள் மற்றவர்களுக்கு விரோதமாக குற்றம் செய்தார்கள் என்று விசாரிக்கப்பட்டார்கள். இருவர் தவறு செய்திருந்தனர் ஒருவர் எந்த தவறும் செய்யவில்லை.

மூன்று பேரும் அரசாங்கத்தால் விசாரிக்கப்படடனர், இருவருக்கு அவர்கள் செய்த குற்றத்திற்கு சரியான தண்டனை விதிக்கப்பட்டது ஒருவருக்கு சரியான தீர்ப்பு வழங்கப்படவில்லை.

மூன்று பேருக்கும் சிலுவை சுமக்க கொடுக்கப்பட்டது இருவர் அதை சுமக்கும்படி தவறு செய்திருந்தனர். ஒருவர் அதை சுமக்கும் அளவு எந்த தவறும் செய்யவில்லை.

மூன்று பேரையும் கிண்டல் செய்து அவர்கள் மேல் துப்பினர், இருவர் திரும்ப திட்டி சபித்து, அவர்கள் மேல் திரும்ப துப்பினர், ஒருவர் அமைதியாக எல்லாவற்றையும் சகித்துக் கொணடார்.

மூன்று பேரையும் சிலுவையில் ஆணிகளால் அறைந்தார்கள், இருவர் அதற்கு பாத்திரராயிருந்தார்கள்,ஒருவர் அதற்கு எந்தவிதத்திலும் பாத்திரராயிருக்கவில்லை.

மூன்று பேரும் சிலுவையில் தொங்கும்போது பேசினர், இருவர் வாக்குவாதம் செய்தனர், ஒருவர் அப்படி வாக்குவாதம் செய்யவில்லை.

மூன்று பேரும் மரணம் வரும் நிச்சயித்திருந்தனர், இருவர் அதை எதிர்த்தார்கள், ஒருவர் எதிர்க்கவில்லை.

மூவரும் சிலுவையில் மரித்தார்கள், மூன்று நாட்கள் கழித்து இருவருடைய கல்லறைகளில் அவர்களுடைய உடல் இருந்ததுஒருவருடைய உடல் அங்கே இல்லை அவர் உயிர்த்தெழுந்தார் ஆமென் அல்லேலூயா!

உலகத்திலே வந்த எந்த மனிதனிலும், மனிதனாய் உலகத்தில் வந்து அவதரித்த தெய்வமாகிய கிறிஸ்துவே மரித்து உயிர்த்தெழுந்து இன்னும் ஜீவிக்கிறவராக இருக்கிறார். அவர் ஜீவிப்பதால் நாம் ஜீவிக்கிறோம். அவர் ஜீவிப்பதால் நாளைய தினம் குறித்து கவலையோ பயமோ நமக்கு இல்லை. ஏனென்றால் நம்முடைய எதிர்காலமும், நம்முடைய வாழ்க்கையும் அவருடைய கரத்தில் இருக்கிறது. அதனால் நாம் வாழுகிற வாழ்க்கைக்கும் பிரயோஜனமுண்டு. நாம் நமக்கு வருகிற எந்த பிரச்சனைகளைக் குறித்தும் கலங்கி தவிக்க வேண்டிய அவசியமில்லை. நம்முடைய வாழ்க்கை அவருடைய கரத்தில் இருப்பதால் அவர் அந்த பிரச்சனைகளுக்கு தீர்வை நமக்குத் தருவார்;. நாம் விசுவாசத்தோடு அதை அவரிடம் கேட்க வேண்டும். அப்போது அவர் நமக்கு நன்மையாய் எல்லாவற்றையும் மாற்றித் தருவார். ‘அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்’. - (ரோமர் 8:28). இந்த சத்தியம் நம் உள்ளத்தில் ஆழமாக பதிந்து விட்டால் போதும், நம்மை எதுவும், யாரும் அசைக்கமுடியாது.

எல்லாம் நன்மையாக என் இயேசு மாற்றிடுவார்
தாங்கொண்ணா துன்ப துயரங்கள்
தவிக்க வைக்கும் சூழ்நிலைகள்
எல்லாம் நன்மையாக என் இயேசு மாற்றிடுவார்



ஜெபம்
எங்கள் மேல் கண்களை வைத்து ஆலோசனை சொல்லும் எங்கள் நல்ல தகப்பனே, உம்மைத் துதிக்கிறோம். இயேசுகிறிஸ்து தமக்கு வந்த எந்த துன்பத்திலும் வாய்த்திறவாமல் எல்லாவற்றையம் சகித்து எங்களுக்காக சிலுவை சுமந்து, எங்களுக்கு வாங்கிக் கொடுத்த இரட்சிப்பிற்காக ஸ்தோத்திரம். அவர் உயிரோடு எழுந்தபடியால், நாங்கள் இன்று ஜீவிக்கிறோம். எங்களது துன்பமான சூழ்நிலைகளையும் அவர் நன்மையாக மாற்றி எங்களை ஆறுதல்படுத்தி ஆசீர்வதிக்கிறதற்காக ஸ்தோத்திரம். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு
இத்தாலி (Italy) தேசத்திற்காக ஜெபிப்போமா? italy

1) பல துறைகளில் தன்னிறைவு பெற்ற இத்தேசத்தில் தேவனுடைய ஆளுகை உண்டாக ஜெபிப்போம்.


2) இத்தேசத்தில் தேவனுக்கு விரோதமாக நடக்கும் காரியங்கள், தொலைகாட்சி சம்பவங்கள் இத்தேசத்தை விட்டு நீங்க ஜெபிப்போம்.


3) இத்தேசத்தில் நடக்கும் ஊழியங்களை தேவன் தாமே இன்னும் அதிகரித்து ஆத்தும அறுவடையை காண ஜெபிப்போம்.
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com 
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

வேதனைகளை அறிந்த தேவன்


அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2010 நவம்பர் மாதம் 11-ம் தேதி - வியாழக் கிழமை
வேதனைகளை அறிந்த தேவன்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
'நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்' - (யோபு 23:10).

ஒரு ராஜா தனது குடிமக்களின் மனநிலையை அறிந்து கொள்ளும்படி, ஆள நடமாட்டம் இல்லாத ஒரு இராத்திரி வேளையிலே, அநேகர் நடந்து செல்லக் கூடிய ஒரு முக்கிய பாதையிலே ஒரு பெரிய கல்லை உருட்டி வைத்து விட்டு, மக்கள் என்னதான் செய்கின்றனர் என மறைந்திருந்து கவனித்து கொண்டிருந்தார். அந்த கல் பாதையை அடைத்து கொண்டிருந்தது. சிலர் அதை பார்த்து விட்டு, 'இந்த கல்லை எவன் வழியில் போட்டு விட்டு சென்றானோ' என்று திட்ட துவங்கினர். சிலர் அரசாங்கம் சரியாய் செயல்படவில்லை என்று குறை கூறினார்கள். சிலர் வரிப்பணம் கட்டுவது தண்டம் என்றனர். பலரும் பலவிதமாக சொல்லி கொண்டு அந்த கல்லை தாண்டி சென்றனர்.

அனைத்தையும் நாட்டின் ராஜா கவனித்து கொண்டுதான் இருந்தார். அந்த வழியே வந்த ஒரு ஏழை விவசாயி அந்த கல்லை பார்த்து, 'இது அநேகருக்கு தடையாக இருக்கிறது' என்று சொல்லி அந்த கல்லை கஷ்டப்பட்டு புரட்டி தள்ளினார். என்ன ஆச்சரியம்! அந்த கல்லின் கீழ் அரசர் வைத்திருந்த தங்க நாணயங்கள் இருந்தன. அதன் பக்கத்தில் ஒரு தாளில், 'இந்த கல்லை யார் புரட்டி தள்ளி அப்புறப்படுத்துகிறார்களோ அவர்களுக்கே சொந்தம்' என்று எழுதியிருந்தது. அந்த விவசாயியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இன்றும் அநேகர் நம் வாழ்வின் இடையில் திடீரென்று தடைக்கற்கள் போல் வரும் பாடுகளை கண்டு சோர்ந்து விடுகிறோம். சிலர் நான் ஜெபித்து கர்த்தருக்கு பிரியமாய் வாழ்ந்து என்ன பிரயோஜனம் என்று தங்களை தாங்களே நொந்து கொள்கின்றனர். இந்த பாடு எப்பொழுதுதான் என்னை விட்டு நீங்கும் என்று முறுமுறுக்கவும் செய்கிறோம். ஆனால் நாம் இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதற்கு மாத்திரமல்ல, அவர் நிமித்தம் பாடுபடவும் நாம் அழைக்கப்படுகிறோம். கிறிஸ்து நமக்காக உயிரையே கொடுத்திருப்பாரானால் அவருக்காய் நாம் பாடுகளை பொறுமையாய் சகிப்பது ஒன்றும் பிரமாதமல்லவே! இம்மைக்குரிய ஆசீர்வாதங்களுக்காக மட்டுமே நாம் அவரை தேடுவோமானால் அது சுயநலமான தன்மை என்று தானே சொல்லமுடியும்.

பிரச்சனைகளும் போராட்டங்களும் இருந்தும் அவரை உண்மையாய் பின்பற்றுவதே கலப்படமற்ற பக்தியாகும். இதை தான் தாவீது செய்தார். அதனால் தேவனின் இருதயத்திற்கு ஏற்றவராக கருத்பபட்டார். யோபு தனது பாடுகளின் மத்தியிலே புலம்பினாலும் இறுதியாக அவர் தான் போகும் வழியை கர்த்தர் அறிவார் என்று கூறி அமைதியாகிறார். பாடுகளை பொறுமையாய் சகித்த அவர் இரட்டிப்பான நன்மைகளை பெற்றார்.

பிரியமானவர்களே, நாம் பாடுகளை பொறுமையோடு சகிப்போமானால் அதற்கு பின் ஒரு பெரிய ஆசீர்வாதம் உண்டென்பதை மறக்க வேண்டாம். பாடுகளை நாம் புறக்கணிக்கும்போது பெரும் ஆசீர்வாதத்தையும் நாம் இழந்து போவோம். நமக்கு வரும் துன்பங்களை நாம் எப்படி சகிக்கிறோம் என்று கர்த்தர் கவனித்து கொண்டு தான் இருக்கிறார். நாம் வடிக்கும் கண்ணீரையும் கணக்கில் தான் வைத்திருக்கிறார். ஆகவே மனம் சோர்ந்து போகாதிருங்கள். ஏற்ற காலத்தில் எல்லாவற்றையும் கர்த்தர் நன்மையாக மாற்றி தருவார். ஆமென் அல்லேலூயா!

கண்ணீரை காண்கிறார் – நம்
கதறலை கேட்கிறார்
வேதனை அறிகிறார்
விடுதலை தருகிறார்
நம் இயேசு நல்லவர்
ஒரு போதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார்

ஜெபம்
எங்களை நேசிக்கிற நல்ல தகப்பனே, எங்களுக்கு வரும் பாடுகள் மத்தியிலும் நீர் பெரியவராயிருந்து, அவைகளை எல்லாம் மாற்றி, எங்களுக்கு நன்மை செய்கிற தேவனாயிருக்கிறீரே உமக்கு நன்றி. கண்ணை உண்டாக்கினவர் காணாரோ, காதை உண்டாக்கினவர் கேளாரோ என்று வேதம் சொல்லுகிறபடி, எங்களது பாடுகளை கண்டும், நாங்கள் கதறும் சத்தத்தை கேட்டும் இருக்கிற எங்கள் தெய்வமே, விடுதலையை தருவீராக. எங்கள் பாடுகளை மாற்றி போடுவீராக. பாடுகளுக்கு பின் எங்களுக்கு நீர் தரும் பெரிய ஆசீர்வாதத்திற்காக உமக்கு நன்றி. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

ஜெபக்குறிப்பு
ஜெர்மனி (Germany) தேசத்திற்காக ஜெபிப்போமா? germany

1) கர்த்தருடைய பெரிதான கிருபையால், பெர்லின் சுவரை உடைத்தெறிந்து, அதை போலவே கம்யூனிஸ கொள்கையிலிருந்து விடுபட்ட ஜெர்மனி, தற்போது கிறிஸ்தவ நாடாக இருந்தாலும், உலக ஆடம்பரங்களிலும், நாகரீகத்திலும் சிக்கி, கர்த்தரை மறந்து ஜீவிக்கிறதாக காணப்படுகிறது. இந்த தேசம், கர்த்தரை அறிகிற அறிவினால் மீண்டும் நிரப்பப்படவும், சபைகள் செழித்தோங்கவும் ஜெபிப்போம்.


2) இங்குள்ள அனைத்து தரப்பு மக்களும் இரட்சிக்கப்படும்படியாக ஜெபிப்போம்.


3) இந்த கடைசி காலங்களில் கர்த்தரே தேவன் என்று உணர்ந்து, அவருக்குள் வளர ஜெபிப்போம்.


அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com 
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

கிரியைகளினாலே கர்த்தரை மறுதலித்தல்


அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2010 அக்டோபர் மாதம் 29-ம் தேதி - வெள்ளி கிழமை
கிரியைகளினாலே கர்த்தரை மறுதலித்தல்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்னுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள். - (தீத்து 1:16).

கிறிஸ்தவர்கள் முற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். அதனால் பள்ளியிலோ, கல்லூரிகளிலோ நல்ல கோர்ஸ் கிடைப்பது அரிதான காரியமாயிருக்கிறது. ஒரு தாயார் தனது மகனை ஒரு சிறந்த பள்ளியில் 11ம் வகுப்பு சேர்க்க சென்ற போது, கிறிஸ்தவர் என்ற வார்த்தைக்கு பதிலாக வேறு மதத்தை குறிப்பிட்டால் உங்கள் மகனுக்கு சீட் கிடைக்கும் என்று ஒருவர் கூறினார். 'ஆண்டவரே உம்மை மறுதலிக்காதபடி என்னை காத்து கொள்ளும்' என ஜெபித்து விட்டு வேறு பள்ளியில் சேர்த்து விட்டார் அந்த தாயார். ஒரு மாதம் கழித்து மீண்டுமாக முதலில் கேட்ட பள்ளியிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. 'நீங்கள் கேட்ட குரூப்பில் ஒரு இடமுள்ளது. உங்கள் மகனை சேருங்கள்' என்று. அன்றே போய் அந்த பள்ளியில் சேர்த்தனர். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். தேவன் எவ்வளவு உண்மையுள்ளவர். ஆகவே அவர் நம்மிடமும் அதே உண்மையை எதிர்ப்பார்க்கிறார்.

தாவீது தேவனிடம் இவ்வாறு முறையிடுகிறார், 'இரட்சியும் கர்த்தாவே, பக்தியுள்ளவன் அற்று போகிறான்' (சங்கீதம் 12:1) மீகா தீர்க்கதரிசியும் இவ்வாறே புலம்புகிறார். 'தேசத்தில் பக்தியுள்ளவன் அற்று போனான். மனுஷரில் செம்மையானவன் இல்லை' (மீகா 7:2). ஆம் நமது பக்தியும், வைராக்கியமும் வெயிலை கண்ட பனியை போலத்தான் அநேக நேரங்களில் இருக்கிறது. அரசின் சலுகைகைள பார்த்தால் பக்தி வைராக்கியத்தை அடகு வைத்து விடுகிறோம். அவரை மிக எளிதாக மறுதலித்து விடுகிறோம். ' நான் மனதில் இயேசுவைத்தான் நினைத்து கொண்டிருக்கிறேன். சான்றிதழில் தான் மாற்றம் செய்யப்பட்டுள்ளது' என கூறினாலும், தேவ நாமம் மகிமைப்படுமா? தாவீதை குறித்து அபிமெலேக் சவுல் ராஜாவிடம் கூறும்போது, 'உம்முடைய எல்லா ஊழியக்காரரிலும் தாவீதைப்போல.. உம்முடைய வீட்டிலே உண்மையுள்ளவன் யார்?' அதே போல மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவராயிருந்தார். அதனால் தான் திக்குவாயும் மந்த நாவுமுள்ளவராயிருந்தாலும் இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தும் தலைவனாக உயர்த்தப்பட்டார். ஆம் தேவனுக்கு உண்மையாயிருந்த ஒவ்வொருவரையும் தேவன் உயர்த்தினார்.

பிரியமானவர்களே, நீங்கள் கிறிஸ்துவுக்கு உண்மையுள்ளவர்களாய் இருக்கிறீர்களா? அல்லது அவரை மறுதலிக்கிறீர்களா? நான் சான்றிதழ்களில் கிறிஸ்தவன் என்பதை மாற்றவில்லை, ஆகவே நான் கிறிஸ்துவை மறுதலிக்கவில்லை' என்று நீங்க்ள சொல்லலாம். ஆனால் உங்களது செயலால் தேவனை மறுதலியாமல் இருக்கிறீர்களா? டிக்கட் எடுக்க மறந்த கண்டக்டரிடம் நீங்களே போய் டிக்கட் எடுத்ததுண்டா? மீதி பணத்தை அதிகமாக தந்த கடைக்காரரிடம் அதை திருப்பி கொடுத்ததுண்டா? நமது சிறு சிறு செயலில் கூட தேவனை மறுதலிக்காமல் இருப்போம்.

சிலர் வாலிப வயதில் கர்த்தருக்காக மிகவும் பக்தி வைராக்கியமாக இருந்திருப்பார்கள். உயிரை கொடுக்க சொன்னாலும் கூட கொடுத்திருப்பார்கள். ஆனால் திருமணம் என்று வரும்போது, கர்த்தர் மேல் இருந்த வைராக்கியம் போய், தகப்பனும் தாயும் காட்டின, கர்த்தரை அறிந்திராத பெண்ணை அல்லது பையனை திருமணம் செய்து, கர்த்தரை மறுதலித்து இப்போது எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கர்த்தருக்காக வைராக்கியம் பாராட்டின நீங்கள் ஏன் திருமண காரியத்தில் மட்டும் கர்த்தரை விட்டு கொடுத்தீர்கள்? அப்படிப்பட்ட வாலிபர்களை பார்க்கும்போது, வேதனையினால் கண்களில் கண்ணீர்தான் வருகிறது. 'மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்' (மத்தேயு 10:33) என்று இயேசுகிறிஸ்து கூறியிருக்கிறாரே. இவர்கள் மீண்டும் கர்த்தரிடம் திரும்பினால் எத்தனை நலமாயிருக்கும்!

ஆதி அப்போஸ்தலர்களிலிருந்து இன்று வரை எத்தனையோ பரிசுத்தவான்கள் தேவனுக்காக தலை வெட்டப்பட்டும், எண்ணெய் சட்டியிலே போட்டு பொரித்தெடுக்கபட்டும் பல்வேறு சித்திரவதை அனுபவித்த போதிலும் அவரை மறுதலியாமல் நின்றனர். இன்று அற்ப உலக காரியத்திற்காக அவரை மறுதலிக்க நீங்கள் துணிந்தது ஏன்? பேதுருவை போல நீங்கள் மறுதலித்திருப்பீர்களானால் மனங்கசந்து அழுது மீண்டும் அவரண்டை திரும்புங்கள். கர்த்தர் உங்களை ஏற்று கொள்ள தயவு பெருத்தவராகவே இருக்கிறார். ஆமென் அல்லேலூயா!

உம்மை மறுதலித்தேன்
பின் வாங்கிப் போனேன்
உம் வல்லமை இழந்தேனையா
என்னை மன்னியும் தெய்வமே

நான் பாவம் செய்தேன்
உம்மை நோக செய்தேன்
உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன்
என்னை மன்னியும் தெய்வமே (2)
இயேசுவே என் தெய்வமே
என்மேல் மனமிரங்கும்


ஜெபம்
எங்களை நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, இந்த நல்ல நாளுக்காக உம்மை துதிக்கிறோம். தகப்பனே, நாங்கள் எந்த சிறு காரியத்திலோ, பெரிய காரியத்திலோ நாங்கள் அறிந்தும் அறியாமலும் உம்மை மறுததலித்திருந்தால் எங்களை மன்னித்தருளும் தகப்பனே. எங்கள மேல் அன்பு கூர்ந்து எங்களுக்காக தமது ஜீவனையே கொடுத்த கிறிஸ்துவை நாங்கள் மறுதலித்து ஜீவிப்பது எப்படி ஐயா, எங்களை மன்னித்தருளும். எங்களுக்கு நஷ்டம் வந்தாலும் எந்த விதத்திலும் நாங்கள் உம்மை மறுதலிக்காதபடி எங்களை காத்து கொள்ள கிருபை செய்யும். ஏங்கள் வாழ்க்கையை மீண்டுமாய் எங்கள் தேவனின் கரங்களில் அர்ப்பணிக்கிறோம். தயவாய் ஏற்று எங்களை மன்னித்து, மீண்டும் இரட்சிப்பின் சந்தோஷத்தை எங்களுக்கு தருவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு
போர்ச்சுக்கல் தேசத்திற்காக - Portugal - ஜெபிப்போமா?

1) ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்து அந்த தேசத்தில் உள்ள அனைவரும் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.


2) இந்த தேசத்தில் செய்யப்படும் ஊழியங்கள் நல்ல பலனை கொடுக்க ஜெபிப்போம்.


3) இங்கு வாழும் கிறிஸ்தவர்கள் தங்கள் சாட்சியை காத்து கொள்ள ஜெபிப்போம்.
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com 
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

யார் பிரிக்க முடியும் நாதா


அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2010 அக்டோபர் மாதம் 27-ம் தேதி - புதன் கிழமை
யார் பிரிக்க முடியும் நாதா
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
'பேயோரின் சங்கதியிலே பிலேயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள்தானே; அதினால் கர்த்தரின் சபையிலே வாதையும் நேரிட்டதே'. - (எண்ணாகமம் 31:16).

கர்த்தர் மோசேயிடம் மீதியானியர் யாவரையும் பழிவாங்கும்படி கூறினபோது, இஸ்ரவேலர் மீதியானிய புருஷர் யாவரையும் சிறைபிடித்து கொன்று போட்டார்கள். ஆனால், ஸ்திரீகளையோ விட்டுவிட்டார்கள். 'அப்பொழுது மோசே யுத்தத்திலிருந்து வந்த ஆயிரம்பேருக்குத் தலைவரும், நூறுபேருக்குத் தலைவருமாகிய சேனாபதிகள்மேல் கோபங்கொண்டு, அவர்களை நோக்கி: ஸ்திரீகள் எல்லாரையும் உயிரோடே விட்டுவிட்டீர்களா? பேயோரின் சங்கதியிலே பிலேயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள்தானே; அதினால் கர்த்தரின் சபையிலே வாதையும் நேரிட்டதே'(எண்ணாகமம் 31:14-16) என்று கூறினதாக வாசிக்கிறோம்.

பாலாக் என்னும் மோவாபிய ராஜா பிலேயாம் என்னும் தீர்க்கதரிசியினிடம், இஸ்ரவேல் புத்திரர் மோவாபின் சமனான வெளியிலே வந்து பாளையமிறங்கியிருக்கிறார்கள். இவர்களை இப்படியே விட்டுவிட்டால் 'மாடு வெளியின் புல்லை மேய்கிறதுபோல, இப்பொழுது இந்தக் கூட்டம் நம்மைச் சுற்றியிருக்கிற யாவையும் மேய்ந்துபோடும்' (எண்ணாகமம் 22:4) என்று அவர்களை குறித்து பயந்து அவர்களை சபிக்கும்படி ஆளனுப்பினான். இரண்டு முறை அவர்கள் வந்து, பிலேயாம் அவர்களுடன் சென்று இஸ்ரவேலரை சபிக்க வாயை திறந்த போது, கர்த்தர் அவன் வாயில் வாக்கு அருளி, அவர்களை சபிக்காமல், ஆசீர்வதிக்கவே செய்தான். அவர்களை அவனால் சபிக்கவே முடியவில்லை.

ஆகையால் பிலேயாம், தந்திர உபாயம் செய்து, வேறு எந்தபடியும் அவர்களை அழிக்க வழியில்லை என்று கண்டு, மிகவும் தந்திரமாக, இஸ்ரவேலரை மோவாபிய ஸ்திரீகளுடன், வேசித்தனம் செய்யும்படி, அவர்களுடனே அவன் அந்த ஸ்திரீகளை கலந்து விட ஆலோசனை கொடுத்தான். அதன்படி, 'ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணத்தொடங்கினார்கள். அவர்கள் தங்கள் தேவர்களுக்கு இட்ட பலிகளை விருந்துண்ணும்படி ஜனங்களை அழைத்தார்கள்; ஜனங்கள் போய்ப் புசித்து, அவர்கள் தேவர்களைப் பணிந்துகொண்டார்கள். இப்படி இஸ்ரவேலர் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டார்கள்' - (எண்ணாகமம் 25:1-3).அதுவரை கர்த்தரையே சார்ந்து வாழ்ந்த ஜனங்கள், அந்த மோவாபிய பெண்களுடன் சேர்ந்து, பாகாலை வழிபட ஆரம்பித்தார்கள். ஆகையால் கர்த்தருடைய கோபம் மூண்டு, ஜனங்களுக்குள் வாதை ஏற்பட்டு, அதனால் 24,000 பேர் ஒரே நாளில் மடிந்து போனார்கள். இந்த பிலேயாமின் துராலோசனையை குறித்து, இயேசுகிறிஸ்து வெளிப்படுத்தின விசேஷத்தின் அதிகாரங்களில் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். 'ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு'- (வெளிப்படுத்தின விசேஷம் 2:14).

நாமும் கூட பாவத்திற்கு விரோதமாக போராடுகையில், சில காரியங்களில நாமும் மெத்தனமாக இருந்திருக்கிறோமில்லையா? சே, இந்த நட்பு நம்மை ஒன்றும் பாதிக்காது, இது நம்மை கர்த்தரிடமிருந்து பிரிக்காது என்று நினைத்து விட்டிருக்கிறோமில்லையா? பாவத்திற்கு விரோதமாக நாம் எது நம்மை பாதிக்காது என்று நினைத்திருக்கிறோமோ அதுவே நம்மை கர்த்தரிடமிருந்து பிரித்து விடும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இஸ்ரவேலர் மோவாபிய ஸ்திரீகள் தங்களிடம் வந்து அவர்களை வசீகரித்த போது, அவர்கள் அதை பெரிதாக நினைக்கவில்லை, ஆனால் அது அவர்களை பாவம் செய்ய வைத்தது மட்டுமல்ல, அவர்களை வேறு கடவுள்களை வணங்கவும் வைத்தது. தேவன் அருவருக்கிற காரியங்களை செய்ய வைத்தது. இத்தகைய காரியங்களுக்கு நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மற்ற மதத்தினரோடு நாம் நட்பு கொண்டிருப்பது தவறல்ல, ஆனால் அந்த நட்பு நம்மை அவர்களோடு சேர்ந்து, பாவம் செய்ய வைக்கவோ, அல்லது, தேவன் விரும்பாத மற்ற காரியங்களில் நம்மை ஈடுபடுத்துமானால், அப்படிப்பட்ட நட்புகளுக்கு நாம் விலகியிருப்பது மிகவும் முக்கியம்.

தேவனால் தெரிந்து கொண்ட மக்கள் மேல், பிலேயாம் சாபத்தை கூற முயன்ற போது, அவனால் முடியவில்லை, ஏனெனில் இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் என்பதை அவன் கண்டு கொணடான். ஆகவே கர்த்தருடைய பிள்ளைகளை யாரும் சபிக்க முடியாது. அவர்களை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்கு பிரியம். ஆனால் நம்மை பாவ காரியங்களில் ஈடுபட வைப்பதன் மூலம் சாத்தான் கர்த்தருடைய கோபத்திற்கும், வாதைக்கும் நம்மை இலக்காக்கிவிட முடியும். ஆகவே கர்த்தரை விட்டு பிரிய வைக்கும் எந்த காரியத்தையும் நாம் நம் வாழ்வில் அனுமதிக்கவே கூடாது. 'அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது' (2 கொரிந்தியர் 6:14-15). ஆமென் அல்லேலூயா!

நிகழ்வனவோ வருவனவோ
வாழ்வோ சாவோ பிரித்திடுமோ
அன்பு கூர்ந்த கிறிஸ்துவினால்
அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன்
யார் பிரிக்க முடியும் நாதா
உந்தன் அன்பிலிருந்து தேவா


ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, தேவையற்ற, எங்களை பாவத்திற்குட்படுத்துகிற நட்போ அல்லது வேறு எந்த காரியமோ எங்களுக்குள் காணப்பட்டால், அதை நாங்கள் உடனே விட்டுவிட கிருபை செய்யும். கிறிஸ்துவின் அன்பிலிருந்து எந்த காரியமும் எந்த நபரும் எங்களை பிரித்து விடாதபடி, நாங்கள் உம்மையே பற்றி கொள்ள கிருபை தாரும். அந்நிய நுகமும், அந்நிய காரியங்களும் எங்கள் வாழ்க்கையில் காணப்படாதபடி எங்களை கழுவி சுத்திகரித்தருளும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு
மாலத்தீவிற்காக - Male Island - ஜெபிப்போமா?

இயற்கை எழில் வாய்ந்த, கடலினால் சூழப்பட்டுள்ள இந்த தீவு ஒரு இஸ்லாமிய தீவாகும். இந்த தீவில் வேறு எந்த மதத்திற்கும் அனுமதியில்லை. இங்கு அநேக இலங்கை மக்கள் வந்து குடியேறி இருக்கிறார்கள் என்று கூறப்படுவதுண்டு.


1) இந்த தீவில் உள்ள ஒவ்வொருவரும் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். 


2) இந்த தீவில் உள்ள மக்கள் ஆவிகள் மேல் நம்பிக்கை உள்ளவர்கள் என்றும், இரவு ஒனபது மணிக்கு மேல் யாரும் வெளியே வரமாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியாகிய கிறிஸ்து இவர்களுக்குள் பிரகாசிக்கவும், இந்த தீவில் உள்ள ஒவ்வொருவரும் கிறிஸ்துவை அறிந்து இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம்.

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com 
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

கல்வாரி அன்பு


அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2010 அக்டோபர் மாதம் 26-ம் தேதி - செவ்வாய் கிழமை
கல்வாரி அன்பு
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன். - (கலாத்தியர் 2:20).

நாம் அனைவரும் கிறிஸ்து நமக்காக, நம்முடைய பாவங்களுக்காக மரித்தார் என்றும், நமக்கு இரட்சிப்பை இலவசமாக தம்முடைய இரத்தத்தை சிந்தி சம்பாதித்து கொடுத்திருக்கிறார் என்றும் விசவாசிக்கிறோம். கிறிஸ்துவை ஏற்றுகொண்டிருந்தால், அவருடைய அன்பும் நமக்குள் இருக்க வேண்டும். கீழே காணப்படும் காரியங்கள் ஒவ்வொன்றையும் நாம் வாசித்து, நமக்குள் அந்த காரியங்கள் காணப்படுகிறதா என்று நம்மையே ஆராய்ந்து பார்ப்போமா?

அன்பற்ற வார்த்தையை பேசிவிட்டு, அன்பற்ற சிந்தை கொண்டுவிட்டு, அதைக்குறித்து சிறிதுகூட எனக்கு மனத்துயரம் இல்லாதிருந்தால், நான் கல்வாரி அன்பை ஒன்றுமே அறியாதிருக்கிறேன்.

பிறருக்கு ஊறு விளைவிக்கும் ஜோக்குகளில் நான் இன்பம் கொண்டால், சாதாரண சம்பாஷணைகளில் பிறரை எளிதில் மட்டம் தட்டவோ அல்லது என் சிந்தையில் கூட பிறரை இளப்பமாய் எண்ணினாலோ நான் கல்வாரி அன்பை ஒன்றுமே அறியாதிருக்கிறேன்.

சிலருடைய நட்பை இழந்து விடக்கூடாது என்பதற்காவோ அல்லது அன்புள்ளவன் என்ற என் நற்பெயரை இழந்து விடகூடாது என்பதற்காகவோ நான் உண்மையை மனதார பேசுவதற்கு நான் அஞ்சுவேன் என்றால் நான் கல்வாரி அன்பை ஒன்றுமே அறியாதிருக்கிறேன்.

எனக்கு நானே இங்கிதமாய் நடந்து கொண்டு, சுய அனுதாபம் என்னும் கொடிய துர்க்குணத்தில் சவுகரியமாய் வீழ்ந்து கொண்டு என்னை குறித்தே எப்போதும் கவலையில் முழ்கியிருந்தால் எல்லாவற்றையும் தேவ கிருபையின் உதவியோடு தைரியமாய் தாங்கி சகித்து கொள்ள முடியவில்லை என்றால் நான் கல்வாரி அன்பை ஒன்றுமே அறியாதிருக்கிறேன்.

மனபூர்வமான மகிழ்ச்சியோடு இரண்டாவது ஸ்தானத்தை என்னால் எடுக்க முடியவில்லை என்றாலோ, அல்லது ஒருவேளை முதலாவது ஸ்தானத்திற்கு வரவேண்டியிருக்கும்போது, 'நான் தகுதியே இல்லாதவன்' என பாசாங்காய் சொல்வேனானால் நான் கல்லவரி அன்பை ஒன்றுமே அறியாதிருக்கிறேன்.

தித்திப்பான தண்ணீர் நிறைந்த ஒரு டம்ளரை எவ்வளவு மோசமாய் அசைத்தாலும் அதிலிருந்து சிந்தும் தண்ணீரில் ஒரு துளி கூட கசப்பாய் மாறுவதில்லை. அவ்வாறிருக்க என்னை திடீரென்று குலுங்க செய்யும் சந்தர்ப்பம் என்னை பொறுமையற்ற அன்பில்லாத வார்த்தைகளை பேச செய்தால் நான் கல்வாரி அன்பை ஒன்றுமே அறியாதிருக்கிறென்.

என்னை யாரோ அநீதியாய் குற்றம் சாட்டி விடுகிறார்கள். அவ்வேளையில் என்னை நான் அறிந்திருக்கிறது போல அவர்கள் எனனை அறிந்திருந்தார்களானால் இப்போது சாற்றிய குற்றத்தை விட அதிகமாய் என்னை குற்றம் சாட்ட முடியும் என்ற உண்மையை மறந்து அவர்களிடம் கசப்பு கொள்வேன் என்றால், நான் கல்வாரி அன்பை ஒன்றுமே அறியாதிருக்கிறேன்.

எனக்கென்று விசேஷித்த நண்பர்களை இணைத்து கொண்டு அதனிமித்தம் என்னோடுள்ள மற்றவர்கள், 'தாங்கள் விரும்பப்படாதவர்கள்' என எண்ணும் நிலையை நான் உருவாக்கியிருந்தால், இவ்வாறு என்னுடைய சிநேகம் பரந்த மனதுடையதாய் இராமல் எல்லாரையும் உண்மை ஐக்கியத்திற்குள் இணைத்து கட்டுவதாய் இல்லாதிருந்தால், நான் கல்வாரி அன்பை ஒன்றுமே அறியாதிருக்கிறேன்.

பிறரால் முரட்டுதனமாக நடத்தப்படுதல், தனிமைப்படுத்தப்படுதல், விரும்பாத சூழ்நிலையில் வைக்கப்படுதல் போன்ற கடுமையான துன்புறுத்தலுக்கு நான் உள்ளாக வேண்டியது தேவனுடைய ஊழியத்திற்கு அல்லது தேவன் என்னை வனைய தேவையாய் இருக்கும்போது, நானோ அதை தவிர்க்க முயற்சித்தால் நான் கல்வாரி அன்பை ஒன்றுமே அறியாதிருக்கிறேன்.

உங்களிடம் கல்வாரி அன்பு உண்டா? - (சகோதரி ஏமிகார்மைக்கேல்)

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே
கர்த்தா உம் பாடுகள் எப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே

எம்மையும் உம்மைப் போல் மாற்றிடவே
உம் ஜீவன் தந்தீரன்றோ
எங்களைத் தரைமட்டும் தாழ்த்துகின்றோம்
தந்துவிட்டோம் அன்பின் கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும்

ஜெபம்
எங்களை நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன் என்று கூறி கொள்ளும் எங்கள் இருதயங்களில் உண்மையான கல்வாரி அன்பு இருக்கிறதா என்று நாங்கள் எங்களையே ஆராய்ந்து பார்க்க கிருபை செய்யும். மேலே சொல்லப்பட்ட காரியங்களில் நாங்கள் எதிலே குறைவுபட்டிருந்தாலும் தயவாய் எங்களுக்கு மன்னித்து, உண்மையான கல்வாரி அன்பு எங்களுடைய இருதயத்தில் காணப்பட கிருபை செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு
யோர்தான் நாட்டிற்காக - Jordan - ஜெபிப்போமா?

இஸ்ரவேல் நாட்டோடு எல்லையாக கொண்டுள்ள இந்த தேசம் மிகவும் ஏழ்மையானது. இஸ்ரவேல் நாட்டிலிருந்து வெளியேற்ற பெற்ற பாலஸ்தீனியர்கள் இந்த நாட்டில் நாட்டுரிமை எடுத்து இங்கு வாழ்கிறார்கள். வளைகுடா போருக்கு பின் இந்த நாட்டின் பொருளாதாரம் மிகவும் சீர்குலைந்து போயிருக்கிறது.


1) இங்குள்ள மக்கள் இரட்சிக்கப்படும்படி ஜெபிப்போம்.


2) இங்கு கிறிஸ்தவ மிஷனெரிக்ள உண்டு. அவர்கள் செய்யும் ஊழியங்கள் நல்ல கனியை கொடுக்க ஜெபிப்போம்.


3) இங்கு சபைகள் பெருகும்படியாக ஜெபிப்போம்.


4) இந்த நாட்டை ஆளுகிற இராஜாவிற்கு நல்ல ஞானத்தை தேவன் தந்து வழிநடத்த ஜெபிப்போம்.


அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com 
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.